
இலங்கையில் அரசியல் எதிர்கட்சிகளின் கூட்டமைப்பை தகர்ப்பதன் ஒருகட்டமாகவே சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்விகண்ட சரத் பொன்சேகா நேற்று இரவு கைதுசெய்ய்பட்டமையை லண்டனை மையமாகக்கொண்ட சர்வதேச மன்னி;ப்பு சபை, கண்டித்துள்ளது.
தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிப்பதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துவெளியிடுகையில், சரத் பொன்சேகாவின் கைதானது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும், தேர்தல் வெற்றியின் பின்னரும், நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பாதுகாக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.














